கான்சிட்டி படத்தை எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் ஹரிஷ் துரைராஜ்.
இதில் அர்ஜுன் தாஸ் – சரவணா,அன்னா பென் – மித்ரா,யோகி பாபு – ஜாக்கி, வடிவுக்கரசி – ஜானகி, அகிலன் – ஜீவா, நந்தகோபால் -கல்யாணசுந்தரம், VTV கணேஷ் – கங்காதரன், தீப ராமானுஜம் – சுதா, ராதா ரவி – அப்துல் ரசாக்,அருள் தாஸ் – கோபி, ஷாஜி சென் – எம் எல் ஏ செந்தில், தம்பி ராமையா – வரதராஜ்,ரமேஷ் திலக் – Dr சுப்ரமணி, பரத்வாஜ் ரங்கன் – ரங்கன், இமான் அண்ணாச்சி – சுட்டி அண்ணா,பொன்வண்ணன் – சந்திரசேகர், ராகு எசக்கி – சிவா, சதானந்த் – சதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவினர்கள்:- இசை: ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன், படத்தொகுப்பு: அருள் மோசஸ் ஏ, தயாரிப்பு வடிவமைப்பு: ராஜ், ஆடை வடிவமைப்பு: நவா ராம்போ- ராஜ்குமார்,நடன அமைப்பு: சந்தோஷ், சண்டைப்பயிற்சி:ஆக்ஷன் சந்தோஷ்,ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா,ஒலி கலவை: டி. உதய் குமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோஸ்), சிறப்பு ஒப்பனை: ஏ. ஆர். அப்துல் ரசாக், ஸ்டில்ஸ்: மணியன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: விஜய் எம். பி.,நிர்வாகத் தயாரிப்பாளர்: பரத் துரைராஜ், இணைத் தயாரிப்பாளர்கள்: பிரபா பிரேம்குமார், சித்து நாயர், அருண் பிரஜீத் மனோகரன், விஜய் எம். பி.,தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு: டெல்டா ஸ்டுடியோஸ்,வெளியீடு: டி. ஆர். எஸ். முத்துக்குமார் மற்றும் கே. ஜே. ஐயப்பன், மக்கள் தொடர்பு : யுவராஜ்
2017 ஆம் ஆண்டு சரவணன் (அர்ஜுன் தாஸ்) மற்றும் அவரது மனைவி மித்ரா (அன்னா பென்) இவர்களுடன் மித்ராவின் சகோதரர் ஜாக்கி (யோகி பாபு) மற்றும் ஜானகி (வடிவுக்கரசி) மங்களூரில் ஒரு சிறிய மெஸ் (Mess) நடத்தி வருகிறார்கள். சரவணனும் மித்ராவும் பேசிக்கொள்வதில்லை, ஆனால் தங்கள் மாற்றுத்திறனாளி மகன் ஜீவாவிற்காக ஒரே வீட்டில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளியில் சாதாரணக் குடும்பம் போல் தெரிந்தாலும், உண்மையில் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்த கடந்த காலத்தைக் கொண்ட ஏமாற்று பேர்வழிகள். ஒரு நாள் இவர்களது மகன் ஜீவா பள்ளியிலிருந்து கடத்தப்படுகிறான்.சிசிடிவி காட்சிகளை ஆராயும்போது, சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரால் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பழைய எதிரிதான் பழிவாங்க ஜீவாவைக் கடத்தியிருக்கிறான் என்பது தெரியவருகிறது. அதன் பிறகு இவர்களது பழைய ரகசியங்களும், இவர்கள் எப்படி ஒன்றாக இணைந்தார்கள் என்ற பின்னணியும் அவிழ்கிறது. 2010 ஆம் ஆண்டு பின்னோக்கி கதைக்களம் செல்கிறது.சென்னை புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன் சரவணன். மின்சாரத் துறை சார்ந்த வேலை மற்றும் சிறு வியாபாரங்களைச் செய்து வரும் அவருக்கு, எதிர்பாராத சில கடுமையான பண நெருக்கடி ஏற்படுகிறது. தனது தேவைகளுக்காகவும் வியாபாரத்திற்காகவும் உள்ளூர் கந்துவட்டி கும்பலிடம் பெரிய தொகையைக் கடனாக வாங்குகிறார். இந்த கடனை அடைப்பதற்காக மதிப்பிழப்பு காலக்கட்டத்திற்கு முன்பு, மின்சார வாரிய அலுவலகத்திற்குள் நடக்கும் ஒரு மாபெரும் கேஷ்-எக்ஸ்சேஞ்ச் மோசடியை செய்கிறார். பணம் இரட்டிப்பாக்கும் தொழில் தொடங்க இதில் பணத்தை முதலீடு செய்ய மித்ரா, ஜாக்கி, ஜானகி இணைகின்றனர். அதன் பின் அதிக பணம் சம்பாதிக்க சரவணன் தன் நண்பனிடம் பத்து கோடி கொடுத்து 15 கோடி பெற நினைக்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக நண்பன் இறக்க பண நெருக்கடியிலும், போலீசிலும் சிக்கி அங்கிருந்து தப்பித்து சரவணன், கர்ப்பிணி பெண் மித்ரா, ஜாக்கி, ஜானகி மங்களூர் செல்கின்றனர். சென்னையில் இருந்த போலீஸ் அதிகாரிதான் ஜீவாவை கடத்தியுள்ளது என்பது தெரிய வர சென்னைக்கு மொத்த குடும்பமும் வந்து ஜீவாவை மீட்க வருகின்றனர். இறுதியில் போலீஸ் அதிகாரியின் அவசர பண தேவையை பூர்த்தி செய்து ஜீவாவை மீட்டார்களா? பணம் கிடைத்த பின்னும், இத்தனை நாட்கள் குடும்பமாக நடித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட உண்மையான ‘பாசம்’ காரணமாக, அந்தப் பணத்தை அரசாங்கத்தின் மின்சாரத் துறைக்கே ரகசியமாகத் திருப்பித் தந்தார்களா? மங்களூரில் போலியாகத் தொடங்கிய இவர்களது குடும்ப உறவு, சென்னையில் உண்மையான பாசக் குடும்பமாக மாறியதா? நேர்மையாக வாழத் தொடங்கினார்களா? என்பதே ‘கான் சிட்டி’ படத்தின் கதை!

அர்ஜுன் தாஸுக்கு அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இது வணிக ரீதியாக அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது. சீரியஸான முகபாவனைகளைத் தாண்டி, இதில் அவரது காமெடி டைமிங் மற்றும் மிமிக்ரி செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்யும் இடத்திலும், அருகில் இருக்கும் விடிவி கணேஷின் குரலிலேயே அவரிடமே மிமிக்ரி செய்யும் இடத்திலும் தியேட்டரில் அப்ளாஸ் வாங்குகிறார்.
நாயகி அன்னா பென் தாயாகவும், சுழ்நிலையால் ஏமாற்று பெண்மணியாகவும் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாகவும், எதார்த்தமாகவும் கையாண்டுள்ளார். அர்ஜுன் தாஸ் உடனுள்ள காட்சிகளில் இவரது நடிப்புத் திறன் படத்திற்குப் பக்கபலமாக அமைந்துள்ளது.
விடிவி கணேஷ் மின்வாரிய அலுவலகத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து இவர் செய்யும் லூட்டிகள் மற்றும் ஒன்-லைனர்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு யோகி பாபுவின் ஒரிஜினல் பாணி காமெடி இதில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. வடிவுக்கரசி மற்றும் யோகி பாபுவுக்கு இடையேயான அம்மா-மகன் காட்சிகள் டார்க் காமெடிக்கு மிகச்சிறந்த உதாரணம்.
காவல்துறை அதிகாரியாக நடித்தவர் மற்றும் அர்ஜுன் தாஸின் நண்பராக வரும் சதா கதாபாத்திரம், சிறுவனாக நடித்த பையன் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஸ்பேஸை சரியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
படத்தின் மற்றொரு ஹீரோ ஷான் ரோல்டன் எனலாம். சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் காட்சிகளுக்கான பின்னணி இசையை மிகச் சரியாகக் கொடுத்துள்ளார். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சியில் பழைய பாடல் பாணியில் வரும் “ஏமாறாதே… ஏமாற்றாதே…” என்ற பாடல் படத்திற்குப் பெரிய பலமாக மாறியுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன். ஒரு டார்க் காமெடி த்ரில்லர் படத்திற்குத் தேவையான லைட்டிங் மற்றும் பிரேம்களை மிகச் சரியாகக் கையாண்டுள்ளார். நடுத்தரக் குடும்பத்தின் எதார்த்தமான சூழலையும், அதே நேரத்தில் பண மோசடி உணர்வையும் பிரிக்காத வண்ணம் ஒரு துடிப்பான, வண்ணமயமான டோனைப் பயன்படுத்தியுள்ளார். மின்வாரிய அலுவலகம் மற்றும் வீட்டின் குறுகலான இடங்களுக்குள் கேமரா நகரும் விதம், கதாபாத்திரங்களின் பதற்றத்தையும் பேராசையையும் மிக நெருக்கமாகக் காட்ட உதவியுள்ளது.
இப்படத்தின் படத்தொகுப்பை அருள் மோசஸ் A கவனித்துள்ளார். ஒரு ஏமாற்று வேலை அல்லது க்ரைம் காமெடி படத்திற்கு எடிட்டிங் மிக முக்கியம். படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், காட்சிகளின் நகர்வு சுவாரஸ்யமாகவும் எடிட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், படத்தின் இரண்டாம் பாதியில் சில எடிட்டிங் குறைபாடு குறிப்பாக, ஒரு சில காட்சிகள் மீண்டும் மீண்டும் விவரிக்கப்படும் பாணி மற்றும் சில நீளமான காட்சிகள் படத்தின் வேகத்தை சற்றே குறைக்கிறது
படத்தின் மையக் கருவான மின்வாரிய அலுவலகப் பின்னணி மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் வீடு ஆகியவற்றின் செட் டிசைனிங் மிகவும் எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைக்குத் தேவையான நம்பகத்தன்மையுடன் திரையில் கொண்டு வந்ததில் கலை இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது.
’சதுரங்க வேட்டை’, ‘ஸ்கேம் 1992’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களின் வரிசையில், மனிதர்களின் பணத்தாசையையும் அதனால் அவர்கள் சிக்கிக்கொள்ளும் நூதன ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து இக்கதை பின்னப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்யும் நாயகன், அங்கு நடக்கும் சில சம்பவங்கள் மற்றும் மனிதர்களின் பேராசையைச் சுற்றி நகரும் த்ரில்லர் கதையை இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் கலகலப்பான திரைக்கதையோடு கையாண்டுள்ளார். பேராசை ஆபத்தானது என்ற கருத்தை சீரியஸாகச் சொல்லாமல், கலகலப்பாகக் கடத்திய இயக்குநரின் புத்திசாலித்தனம்.சில இடங்களில் அடுத்த காட்சி இப்படித்தான் நகரப் போகிறது என்பதை எளிதாகக் கணிக்க முடிவதால், சுவாரஸ்யம் சற்றே குறைகிறது.