Take a fresh look at your lifestyle.

டிஎன் 2026 சினிமா விமர்சனம்

20

நடிகர்கள்:-​
நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்.

படக்குழுவினர்:-
தயாரிப்பு பேனர்: கண்ணன் ரவி குரூப்ஸ்
தயாரிப்பாளர்: கண்ணன் ரவி
இணை தயாரிப்பாளர்கள்: தீபக் ரவி
இயக்குனர்: உமாபதி எஸ். ராமையா
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
ஒளிப்பதிவு இயக்குனர்: பி.ஜி.முத்தையா
எடிட்டர்: ஆரல் ஆர் தங்கம்
கலை இயக்குனர்: என்.கே. ராகுல்
நடன இயக்குனர்கள்: சாண்டி, பிரவின் ஜி
ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ
ஆடை வடிவமைப்பாளர்: நவா ராம்போ ராஜ்குமார்
பாடலாசிரியர்கள்: கார்த்திக் நேதா, மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா
மக்கள் தொடர்பு: சதீஷ் ஏஐஎம்

பொள்ளாச்சியில் செல்வாக்கு மிக்க ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மன்றாடியார் (தம்பி ராமையா). தீவிரமான எம்.ஜி.ஆர் பக்தரான இவர், இன்றைய அரசியலில் ஒரு ‘மாஸ்’ பிம்பத்தை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார். அப்போதுதான் இவருக்குத் தற்செயலாக அறிமுகமாகிறார் குல்கந்த் குமார் (நட்டி நட்ராஜ்). அண்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வந்து, மங்கலான தமிழில் பேசும் ஒரு சாதாரண தொழிலாளி அவர் தற்செயலான சூழலில் ஒரு சினிமா நட்சத்திரமாக மாறுகிறார். சிவலிங்கம், குல்கந்தின் முகவெட்டில் தனது ஆதர்ச நாயகன் எம்.ஜி.ஆரின் சாயலைக் கண்டு, அவரை ஒரு மிகப்பெரிய சினிமா நட்சத்திரமாக மாற்றத் திட்டமிடுகிறார். தனது பண பலத்தால் குல்கந்தை வைத்து எம்.ஜி.ஆரின் கொள்கைகளை படமாக தயாரித்தாலும், அந்தப் படங்கள் தொடர் தோல்விகளை சந்திக்கிறது. படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் குல்கந்தை விடாமல் புரமோட் செய்து, இறுதியில் ஒரு பெரிய ‘மாஸ்’ ஹீரோவாக வளர்ந்து ‘தங்க நட்சத்திரம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒரு கட்டத்தில், சினிமாவில் உச்சாணிக் கொம்பிற்குச் சென்ற குல்கந்த், ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியலில் நுழைய திட்டமிடுகிறார். ஆனால், இங்கேதான் கதை சூடுபிடிக்கிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து நடக்கும் இந்த அரசியல் சதுரங்க வேட்டையில், உருவாக்கிய ஜமீன்தாருக்கும், உருவான நட்சத்திரத்திற்கும் இடையே ஏற்படும் அதிகாரப் போட்டி, மோதல் மற்றும் அதில் தலையிடும் இதர அரசியல் சக்திகள் என்ன ஆகின்றன என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

நட்டி நடராஜ் தனது இயல்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார். பாடி லாங்குவேஜில் ஒரு சூப்பர் ஸ்டாருக்கான அந்த ‘கெத்து’ மற்றும் ஏழைத் தொழிலாளியாக இருந்த போது காட்டிய அந்த அப்பாவித்தனம் என இரண்டு பரிமாணங்களிலும் நட்டி முற்றிலும் மாறுபட்ட முகங்களைக் காட்டியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில், பிழைப்புக்காக பொள்ளாச்சிக்கு வந்து, மங்கலான தமிழில் பேசும் ஒரு அப்பாவி வெளிமாநிலத் தொழிலாளியாக மிக எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது நடை, உடை மற்றும் அந்த ஏழ்மைக்கு உரிய ஒருவித அச்சம் கலந்த விசுவாசம் என நட்டி அந்த பாத்திரமாகவே மாறி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில், தம்பி ராமையாவால் ஒரு மாபெரும் சினிமா நட்சத்திரமாக உருவெடுத்த பிறகு, நட்டியின் நடிப்பில் ஒரு பெரிய மாற்றம் தெரிகிறது. ஒரு சூப்பர் ஸ்டாருக்கான அந்த உடல் மொழி, கண்கள் காட்டும் அந்த அதிகாரத் தோரணை மற்றும் ரசிகர்களை கையாளும் விதம் என நட்டி ஸ்கோர் செய்துள்ளார். நட்டியின் தனித்துவமான வசன உச்சரிப்பு தியேட்டரில் கைதட்டல்களை பெறுகின்றன. நட்டியின் திரைப் பயணத்தில் இது ஒரு “தங்க நட்சத்திரம்” போன்றதொரு மகுடம் என்பதில் சந்தேகமில்லை!

தம்பி ராமையா இந்தப் படத்தின் ஆணிவேர்;. தம்பி ராமையா வெறும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசன கர்த்தாவாகவும் தன் முத்திரையை பதித்துள்ளார். தம்பி ராமையா இந்தப் படத்தின் ஆணிவேர் இவர்தான். சிவலிங்கம் மன்றாடியார் என்ற கதாபாத்திரத்தில் மிடுக்காகவும், அதே சமயம் அதிகாரப் போக்கிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரது அனுபவ நடிப்பு படத்தின் ஆன்மாவாக திகழ்கிறது. பொள்ளாச்சி ஜமீன் வாரிசாக, அதிகாரத் திமிர் கொண்ட ஒரு மனிதராக தம்பி ராமையா திரையில் தோன்றும் போதே அந்த இடத்தையே ஆக்கிரமிக்கிறது. அவரது மிடுக்கான நடை, வேட்டி கட்டிய கம்பீரம் மற்றும் மற்றவர்களை கிள்ளுக்கீரையாக பார்க்கும் அந்தப் பார்வை என ஜமீன்தார் பாத்திரத்திற்கு நூறு சதவீத நியாயம் செய்துள்ளார். ஒரு சாதாரணத் நடிகனை பிடித்து, அவனை ஒரு சூப்பர் ஸ்டாராக மாற்ற அவர் போடும் திட்டங்கள் மற்றும் அதில் அவர் காட்டும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது. தம்பி ராமையா வசனம் எழுதியிருப்பதால், அவரது பாணிக்கு ஏற்ற ‘பன்ச்’ வசனங்கள் மற்றும் நையாண்டிகள் படத்தில் தூக்கலாக உள்ளது. நட்டிக்கும் தம்பி ராமையா விற்கும் இடையிலான அந்த “ஈகோ” போர் தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு கட்டத்தில் நட்டி தன்னை எதிர்த்துப் பேசும் போது, தம்பி ராமையா காட்டும் அந்த அதிர்ச்சியும், பின்னர் அதைச் சமாளிக்க அவர் செய்யும் அரசியல் சூழ்ச்சிகள் திரைக்கதையை விறுவிறுப்பா ஆக்குகின்றன. குணச்சித்திர நடிப்பு, வில்லத்தனம், அரசியல் தந்திரம் என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு வெரைட்டி நடிப்பை வழங்கியுள்ளார்.

நட்டி மற்றும் தம்பி ராமையா ஆகியோருக்கு இணையாக, கதையின் ஓட்டத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான தூண்களாக சீனியர் நடிகர்களான எம். எஸ். பாஸ்கர் மற்றும் இளவரசு தங்கள் அனுபவ நடிப்பால காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்.

சாந்தினி மற்றும் ஸ்ரிதா கதைக்குத் தேவையான பங்களிப்பைச் சரியாக வழங்கியுள்ளனர்.

யாஷிகா ஆனந்த் கிளாமர் மற்றும் ஒரு சில முக்கியக் காட்சிகளில் வந்து செல்கிறார்.

ரெடின் கிங்ஸ்லியின் ஒன்-லைனர்கள் சிரிப்புக்கு கடுகளவு உத்தரவாதம் வழங்குகிறார்.

ஒரு நடிகராக திரையுலகில் அறிமுகமான உமாபதி எஸ். ராமையா, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தனது தந்தை தம்பி ராமையாவின் அனுபவத்தையும், இன்றைய தலைமுறையின் ரசனையையும் இணைத்து ஒரு சமகால அரசியல் நையாண்டி வழங்கியுள்ளார். சினிமா புகழை வைத்து அரசியலுக்கு வரும் தற்போதைய ட்ரெண்டை மிக நுணுக்கமாகவும், அதே சமயம் நகைச்சுவையாகவும் கையாண்டுள்ளார் இயக்குநர். ஒரு சாதாரண வெளிமாநில தொழிலாளியைத் தேடிப்பிடித்து, அவரை ஒரு மாஸ் ஹீரோவாக்கும் அந்த ‘மேக்கிங்’ காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார். சினிமாத் துறையின் உள் விவகாரங்களையும், பிம்பம் கட்டமைக்கப்படும் விதத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி எதார்த்தமாக படமாக்கியதில் உமாபதியின் முதிர்ச்சி தெரிகிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலை மையமாக வைத்து, இன்றைய மீம்ஸ் கலாச்சாரம் மற்றும் அரசியல் சூழலை மிக நுணுக்கமாக திரைக்கதையில் பொருத்தியுள்ளார். நட்டி நடராஜின் எதார்த்தமான முகம் மற்றும் தம்பி ராமையாவின் அதிரடியான நடிப்பு ஆகியவற்றைச் சம அளவில் பயன்படுத்தியுள்ளார். உமாபதி தனது தந்தையின் வசனங்களுக்கு திரை வடிவம் கொடுத்த விதத்தில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். வசனங்கள் ஒரு பக்கம் கூர்மையாக இருந்தாலும், காட்சிகள் வழியாக அவர் சொல்ல வரும் அரசியல் பாடம் பாராட்டுக்குரியது.