Take a fresh look at your lifestyle.

காட்டாளன் சினிமா விமர்சனம்

8

க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷரீப் முகமது தயாரித்திருக்கும் காட்டா​ளன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பால் ஜார்ஜ்.இதில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே- ஆண்டனி வர்கீஸ், சுனில் – மாரி, கபீர் துஹான் சிங்- எடி, துஷாரா விஜயன் – லூசி, ராஜ் திரன்தாசு- மாரி 1995, பார்த் திவாரி – ராபி, ஹரிசங்கர் நாராயணன் – எஸ்பி நெல்சன் நாடார், சந்தீப் ரவிராஜ்-நாடு, மற்றும் ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர், கேமியோ ரோலில்:-அல்போன்ஸ் புத்ரன் – மெண்டிஸ்,லோகேஷ் கனகராஜ்- லியோ கப்ரால் ஆகியோர் நடித்துள்ளனர்.படக்குழுவினர்கள்:-இசை: ரவி பஸ்ரூர், கூடுதல் பாடல்: பி. அஜனீஷ் லோக்நாத், வசனங்கள்: உன்னி ஆர், ஒளிப்பதிவு: ரெனடிவ், கூடுதல் ஒளிப்பதிவு: சந்துரு செல்வராஜ், சுதீப் இளமன், எடிட்டர்: ஷமீர் முஹம்மது, சண்டைக்காட்சிகள்: ஆக்‌ஷன் சந்தோஷ், கெச்சா காம்பக்டீ, எழுத்தாளர்கள்: பால் ஜார்ஜ், ஜோபி வர்கீஸ், ஜெரோ ஜேக்கப், டிரைலர் கட்: தேவானந்த் வி.பி, நிர்வாக தயாரிப்பாளர்: ஜுமானா ஷரீப், தயாரிப்பு வடிவமைப்பாளர்: சுனில் தாஸ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: திபில் தேவ், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: தீபக் பரமேஸ்வரன், முதன்மை கூட்டாளர்: ராஜேஷ் பாஸ்கர், ஒலிப்பதிவு: ராஜகிருஷ்ணன் எம்.ஆர், ஒலி வடிவமைப்பு: கிஷன், சப்தா ரெக்கார்ட்ஸ், ஆடை: தன்யா பாலகிருஷ்ணன், ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர், ஸ்டில் புகைப்படம்: அமல் சி சதர், நடனம்: ஷெரீப்,பிற மொழி டப்பிங் இயக்குனர்-ஆர்.பி.பாலா (ஆர்.பி. ஸ்டுடியோஸ்), தமிழ் விநியோக பங்குதாரர் – ஜிஎஸ் சினிமாஸ் மற்றும் ஆர்பி பாலாமக்கள் தொடர்பு (தமிழ்): நிகில் முருகன்.

கதை 1995-ஆம் ஆண்டு, கேரளா மற்றும் தமிழக எல்லையில் இருக்கும் ‘ஆனகொல்லி’ என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் தொடங்குகிறது. அந்தக் காடு ஒட்டுமொத்தமாக ஒரு கொடூரமான இரண்டு கடத்தல் கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.அந்தக் காட்டு ராஜ்யத்தின் அதிபதியாக மாரி (சுனில்) இருக்கிறார். சட்டவிரோதமான யானை வேட்டை, தந்தக் கடத்தல், மற்றும் சந்தன மரக் கடத்தல் எனப் பல கோடி ரூபாய் கிரிமினல் சாம்ராஜ்யத்தை அவர் நடத்தி வருகிறார். மாரியின் உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக நிறைவேற்றும் இரக்கமற்ற, கொடூரமான வலதுகரமாக எடி (கபீர் துஹான் சிங்) செயல்படுகிறான். காட்டைப் பாதுகாக்கும் பழங்குடி மக்களையும், நேர்மையான வனத்துறை அதிகாரிகளையும் இந்த மாஃபியா கும்பல் கொடூரமாக வேட்டையாடி தங்கள் கட்டுப்பாட்டில் அடக்கி வைத்துள்ளது. இதனிடையே மாரிக்கும் எடிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனித்தனி கடத்தல் குழுக்களாக செயல்பட தொழில் போட்டி உருவாகிறது. ஏடியின் பலத்தை அடக்கவும், அவனது தந்தங்களை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவும் ஆண்டனியை மாரி அழைக்கிறான். இந்த வன்முறை மற்றும் அநீதி நிறைந்த காட்டு உலகிற்குள் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ் பெப்பே) நுழைகிறான். காட்டைப் பற்றி நன்கு அறிந்த, மிருகத்தனமான பலமும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு வாலிபனாக அவன் காட்டப்படுகிறான்.ஆரம்பத்தில் ஒரு சாதாரணக் காரணத்திற்காக மாரியின் ஆட்களுடன் சேரும் ஆண்டனி, ஒரு கட்டத்தில் மாரியின் ஒட்டுமொத்த கடத்தல் நெட்வொர்க்கையே தனியாளாக நின்று சிதறடிக்கத் தொடங்குகிறான். காட்டின் அடர்ந்த பகுதிகளையும், இயற்கை அமைப்புகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மாரியின் ஆட்களை கொரில்லா போர் முறையில் வேட்டையாடுகிறான். மாரியின் சாம்ராஜ்யத்தை அழிக்கத் துடிக்கும் ஆண்டனியின் பின்னணி என்ன? அவனுக்கும் இந்தக் காட்டிற்கும் என்ன தொடர்பு? என்பதே முதல் பாதியின் விறுவிறுப்பு. அதன் பின் மலை வாழ் மக்களின் உயிர்களை காப்பாற்ற இரண்டு தந்தங்களை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு செல்கிறான் ஆண்டனி. அங்கே ஆண்டனிக்கு உதவி செய்ய கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு வலம் வரும் ஒரு விசித்திரமான, துணிச்சலான பெண்ணாக லூசி (துஷாரா விஜயன்) வருகிறார். லூசி உயிரை பணயம் வைத்து ஆண்டனிக்கு தந்தங்களை விற்க உதவி செய்து ஒரு கட்டத்தில் ஆண்டனியுடன் கைகோர்க்கிறாள். இலங்கையிலிருந்து திரும்பும் ஆண்டனியை இரண்டாம் பாதியில் மாஃபிய கும்பல் மாரி, எடி ஒன்று சேர்ந்து அவர்களது ஒட்டுமொத்த அடியாட்கள் பட்டாளமும் அதிநவீன ஆயுதங்களுடன் ஆண்டனியைத் தேடிக் காட்டிற்குள் இறங்குகிறார்கள். காட்டின் இருண்ட பகுதிகளுக்குள் நடக்கும் இறுதிப் போர் ரத்தமும் சதையுமாக மிகவும் உக்கிரமாக அரங்கேறுகிறது. ஆண்டனி மற்றும் லூசி இணைந்து மாரி மற்றும் எடியின் சாம்ராஜ்யத்தை எப்படித் தங்களின் அதிரடி மூலம் வேரறுக்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.படத்தின் மிக முக்கிய அம்சமாக, கிளைமாக்ஸ் முடிந்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘லியோ கப்ரியல்’ என்ற மாஸான கேமியோ கதாபாத்திரத்தில் வந்து, ஆண்டனியின் கதாபாத்திரத்தை நிவின் பாலியின் ‘மீகாயேல்’ மற்றும் உன்னி முகுந்தனின் ‘மார்கோ’ படங்களின் கதைகளோடு இணைத்து, அடுத்த பாகத்திற்கு வழிநடத்திச் செல்கிறார்.

ஆண்டனி வர்கீஸ் பெப்பே மலையாள சினிமாவின் ஆக்ஷன் ஸ்டாரான பெப்பே, தனது வழக்கமான ‘ரா அண்ட் ரஸ்டிக்’ பாணியில் மிரட்டியுள்ளார். ஆனகொல்லி காடுகளுக்குள் வாழும் ஒரு முரட்டுத்தனமான வேட்டைக்காரனாகவும், அதே சமயம் சர்வதேச மாஃபியா உலகோடு தொடர்புகொண்ட ஒரு மர்ம மனிதனாகவும் இரு வேறு பரிமாணங்களை உடல்மொழியிலும், கண்களிலும் கச்சிதமாகக் காட்டியுள்ளார். குறிப்பாக, காடுகளுக்குள் அவர் செய்யும் ‘கொரில்லா’ பாணி சண்டைக் காட்சிகள் அவரது ஆக்ஷன் இமேஜை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

மாரியாக ‘புஷ்பா’ திரைப்படத்திற்குப் பிறகு சுனில் நெகட்டிவ் பாத்திரங்களில் காட்டும் மிரட்டல் இதிலும் தொடர்கிறது. ஆரம்பத்தில் காட்டைப் பாதுகாக்கும் ஒரு ரட்சகனைப் போல வந்து, பின்னர் காட்டின் வளங்களையும், தந்தங்களையும் கடத்தும் ஒரு பேராசை பிடித்த மாஃபியா டானாக மாறும் ‘மாரி’ கதாபாத்திரத்தில் அனல் பறக்க வைத்துள்ளார்.

லூசியாக இத்திரைப்படத்தின் மூலம் துஷாரா விஜயன் மலையாள திரையுலகில் கால் பதித்துள்ளார். பைக் ஓட்டிக்கொண்டும், கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டும் கிரிமினல் உலகிற்கு நடுவே சவால் விடும் ‘லூசி’ கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாரியின் கூட்டத்திற்கு எதிராக அவர் எடுக்கும் விஸ்வரூபம் படத்திற்குப் பெரிய பலம்.

கபீர் துஹான் சிங் இப்படத்தில் எடி மற்றும் அவரது தந்தை ஜோசப் என இரட்டை வேடங்களில் வந்து, அந்தப் பழங்குடி மக்களுக்குக் கொடூரமான அச்சுறுத்தலாகத் தனது பிசிக்கல் லுக் மூலம் மிரட்டியுள்ளார்.

மலையாள சினிமாவின் சீனியர் நடிகர்களான ஜெகதீஷ் மற்றும் சித்திக் (ஜார்ஜ் டி பீட்டர் கதாபாத்திரத்தில்) கதையின் முதிர்ச்சிக்கும், ‘மீகாயேல்’ பிரபஞ்சத்தின் தொடர்ச்சிக்கும் தேவையான மிக நேர்த்தியான எதார்த்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிரபல எழுத்தாளர் உன்னி ஆர் எழுதியுள்ள கூர்மையான மற்றும் அழுத்தமான வசனங்கள், காட்டின் அரசியல் மற்றும் மனிதர்களின் பேராசை ஆகியவற்றைச் சரியாகப் பேசுகின்றன.

‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை தான் இப்படத்தின் இதயம். தீம் மியூசிக் மற்றும் காடுகளுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளுக்கு அவர் கொடுத்துள்ள அதிரடி மியூசிக் தியேட்டரை அதிர வைக்கிறது. பாடல்களை பி. அஜனீஷ் லோக்நாத் மற்றும் நிஹால் சாதிக் அமைத்துள்ளனர்.

காட்டின் இருண்ட பக்கங்களையும், 1995-களின் அந்த ரெட்ரோ காலக்கட்டத்தையும் தனது லென்ஸ் வழியே மிகவும் பிரம்மாண்டமாகக் ஒளிப்பதிவில் கடத்தியுள்ளார் ரெனாடிவ். தாய்லாந்து, வாகடூன், தனுஷ்கோடி எனப் பல்வேறு காடுகளை ஒரே நேர்க்கோட்டில் காட்டிய விதம் அற்புதம்.

படத்தொகுப்பு ஷமீர் முகமது (2 மணி நேரம்) மட்டுமே ஓடும் மிகக் கச்சிதமான லீனியர் எடிட்டிங் மூலம், தேவையற்ற தொய்வுகள் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளை மின்னல் வேகத்தில் நகர்த்தியுள்ளார்.

பால் ஜார்ஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ஜோபி வர்கீஸ் மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோருடன் இணைந்து கதையையும் எழுதியுள்ளார். ஆனகொல்லி காடுகளில் தந்தக் கடத்தலில் ஈடுபடும் மாரி மற்றும் எடியின் மாஃபியா கூட்டத்தை, ஆண்டனி மற்றும் லூசி தங்களின் அதிரடி ஆக்ஷன் மூலம் காட்டின் துணை கொண்டு எப்படி வேரறுக்கிறார்கள் என்ற ஹை-ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர். நிவின் பாலியின் ‘மீகாயேல்’ மற்றும் உன்னி முகுந்தனின் ‘மார்கோ’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக மிகவும் பிரம்மாண்டமான காடுகள் சார்ந்த ஆக்ஷன் தளத்தில் உருவாக்கியதில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. கிளைமாக்ஸில் லோகேஷ் கனகராஜை ‘லியோ கப்ரியல்’ ஆகக் கொண்டுவந்து தியேட்டரை அதிர வைத்துள்ளார்.

மொத்தத்தில் ஒயிட் கோல்ட் என்னும் யானை தந்தத்திற்காக சிகப்பு கலர் குருதியை தெறி விட்டிருக்கும் முழு நீள ஆக்சன் திரைப்படம்.