Take a fresh look at your lifestyle.

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

8

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கும் பிளாஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருகு;கிறார் சுபாஷ் கே ராஜ் இதில் அர்ஜுன் – ராஜாராமன், அபிராமி – நீலவேணி, ப்ரீத்தி முகுந்தன் – நிலா, விவேக் பிரசன்னா – இளங்கோ (நிலாவின் மாமா), ஜான் கொக்கன் – வருண் தயாளன், அர்ஜுன் சிதம்பரம் – ஆபிரகாம், பவன் – கிருபாகரன், பாலா ஹாசன் – சிவன், வினோத் சாகர் – டோபி

படக்குழுவினர்கள்:-கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஐஸ்வர்யா கல்பாத்தி, இசை: ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், தயாரிப்பு வடிவமைப்பாளர்: வீரமணி கணேசன், அதிரடி: பீனிக்ஸ் பிரபு, ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன், ஸ்டில்ஸ் : எஸ்.முருகதாஸ், நிர்வாகத் தயாரிப்பாளர் : எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம்,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்ராஜாராமன் (அர்ஜுன்). அவரும் அவரது மனைவி நீலவேணியு​ம் (அபிராமி) தற்காப்புக் கலையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற ஒரு நடுத்தரக் குடும்பத் தம்பதியர். இவர்களின் மகள் நிலா (ப்ரீத்தி முகுந்தன்) மற்றும் மருந்து விற்பனை கடை நடத்தும் சித்தப்பா இளங்கோ (விவேக் பிரசன்னா) இவர்களுடன் வசிக்கின்றனர். சிறுவயது முதலே நிலாவிற்கு அவளது தந்தை ராஜாராமன் கராத்தே மற்றும் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுத்து, ‘யாராவது அடித்தால் திருப்பி அடி, எப்போதும் உன்னைக் காப்பாற்ற நாங்கள் கூடவே இருக்க மாட்டோம்” என்று ஒரு சுயசார்புடைய, தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். இதனால் நிலாவும் ஒரு சிறந்த கராத்தே வீராங்கனையாக மாறுகிறாள். தந்தை கொடுக்கும் தைரியத்தால் நிலா தனக்கு நடக்கும் அநீதிகளுக்கு மட்டுமின்றி, யாருக்குப் பிரச்சனை என்றாலும் தட்டிக்கேட்கும் வீரமிக்க அதிரடிப் பெண்ணாக வளர்கிறார். அதுமட்டுமில்லாமல் புதிதாக சேரும் ஐடி கம்பெனியில் தவறாக நடந்து கொள்ளும் டீம் லீடரையும் தனக்கு தெரிந்த தற்காப்பு கலையால் தக்க பதிலடி கொடுத்து மிரட்டி வைக்கிறார்.

நிலா எப்போதும் அடிதடி, சண்டை என்று இருப்பதை விரும்பாத அவரது தாய் நீலவேணி (அபிராமி) விரைவாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ய தொடங்குகிறார். இதற்கிடையே ஒரு மாஃபியா கும்பலின் கதை ஆரம்பமாகிறது. ‘கீழக்காடு’ என்ற மலைக்கிராமத்தில் சுமார் ₹7,000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட சுரங்கத் திட்டத்தை கைப்பற்ற அமைச்சர் பி.எல்.தேனப்பனிடம் 1000 கோடி லஞ்சம் பேசி, அதனை செயல்படத்த திட்டமிடும் வருண் தயாளன் (ஜான் கொக்கன்) என்ற பேராசை பிடித்த பெரும் கோடீஸ்வர மாஃபியா மனிதன். தனது சுயநல லாபத்திற்காக அந்த நிலங்களைக் கைப்பற்றத் துடிக்கும் வருண் தயாளன் அதனால் 800 குடும்பங்கள் பாதிக்கப்படுவதும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் உதாசீனப்படுத்துவதும் இவனுக்குத் துணையாக இரக்கமற்ற கொலையாளி ஆபிரகாம் (அர்ஜுன் சிதம்பரம்) மற்றும் கிருபாகரன் (பவன்) என்ற உள்@ர் ரவுடி கும்பல் செயல்படுகிறது. அமைச்சருக்கு 1000 கோடியை வெளிநாட்டில் கை மாற்றும் வேலை ஆபிரகாமிடம் கொடுக்கப்பட, அதை செய்து முடித்து அதற்காக கடவு சீட்டு அடையாளமாக 100ரூபாய் பெற்று வெளிநாட்டிற்கு செல்ல நினைக்கும் போது எதிர்பாராத விதமாக காரில் விபத்து ஏற்பட்டு சுயநினைவு இழந்து போலீஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.அவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட, சுயநினைவு திரும்பியவுடன் அங்கிருக்கும் போலீஸ்காரர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டு தப்பிச் செல்கிறான் ஆபிரகாம். இந்த சண்டையில் காலில் குண்டு பாய அதற்கான சிகிச்சைக்கான மருந்தை வாங்க திருடனாக இருக்கும் டோபியை (வினோத் சாகர்) அனுப்புகிறான். நிலாவின் மருந்து கடையில் மிரட்டி மருந்து வாங்கிக் கொண்டும், அவளது தங்கச் சங்கலியை பறிக்க முயற்சிக்க நிலாவால் அடி வாங்கி போலீசில் ஒப்படைக்கப்படுகிறான்.இதனால் அதிர்ச்சியாகும் கிருபாகரன் மற்றும் ஆபிரகாம், அமைச்சர் மற்றும் வருண்; மாட்டிக்கொள்ள கூடாது என்று என்று நிலா குடும்பத்தை தீர்த்துக் கட்ட ஆட்களை அனுப்புகின்றனர். இவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ளும் நிலா பாதிக்கப்படும் எளிய மக்களுக்கு ஆதரவாகவும், தனக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளவும் தனது கராத்தே திறமையைப் பயன்படுத்தி இந்த மாஃபியா கூட்டத்துடன் நேரடியாக மோதுகிறாள். நிலாவிற்கு ஆபத்து வரும்போது, அவளது தந்தை அர்ஜுன், தாய் அபிராமி மற்றும் அவளது மாமா இளங்கோ (விவேக் பிரசன்னா) என அந்த ஒட்டுமொத்த கராத்தே குடும்பமே விறுவிறுப்பான மற்றும் கொடூரமான கில்லர் மெஷினாக மாறி, மாஃபியா நெட்வொர்க்கை தங்களின் தற்காப்புக் கலையால் எப்படி அடித்து துவம்சம் செய்கிறார்கள்? அதன் பின் சாதுர்யமாக அவர்களை மாட்டி விட்டு எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதே ‘பிளாஸ்ட்’ படத்தின் அசத்தலான கதை.

ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கராத்தே மாஸ்டர் ராஜாராமனாகவும், ஒரு பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள்ளார். சிறுவயதிலேயே தன் மகள் நிலாவை ஒரு தைரியமான பெண்ணாக வளர்க்கும் கதாபாத்திரம். மனைவியிடம் அன்பும், மகளிடம் பாசமும், தம்பிக்கு துணையாகவும் ஒரு நடுத்தர மனிதரின் வாழ்க்கையை பிரதிபலித்துள்ளார். அர்ஜுனின் வழக்கமான ‘மாஸ்’ போலீஸ் இமேஜை உடைத்து, ஒரு நடுத்தரக் குடும்பத் தந்தையாகவும், சண்டைக் காட்சிகளில் தனது அசாத்திய ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ திறமையையும் வெளிப்படுத்தி மிரட்டியுள்ளார். அனைத்து காட்சிகளிலும் எளிய மனிதராக வலம் வந்து தேர்ந்த திறமையுடன் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் கையாளும் திறனில் ஜொலிக்கிறார்.

இப்படத்தின் ‘உண்மையான ஹீரோ’ என்று கொண்டாடப்படுபவர் ப்ரீத்தி முகுந்தன் தான். வழக்கமாகத் தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்யும் மாஸ் ஆக்ஷன், இன்ட்ரோ சண்டைக் காட்சிகளை ஒரு பெண்ணாகத் தனது துடிப்பான கராத்தே ஸ்டண்ட்கள் மூலம் அசாத்தியமாகச் செய்துள்ளார். அநீதியைக் கண்டு பொங்கும் ஒரு தைரியமான பெண்ணின் எமோஷன் மற்றும் ஆக்ஷன் இரண்டையும் கச்சிதமாகக் கடத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் வலுவாக அடித்தளம் அமைத்து தன்னுடைய இயல்பான பங்களிப்பால் தற்காப்பு கலையை பயன்படுத்தி துவம்சம் செய்யும் காட்சிகள் உலகத்தரம். வெல்டன்.

அபிராமி நீலவேணியாக நிலாவின் தாயாராக, ஆரம்பத்தில் சேலை கட்டிய ஒரு அமைதியான நடுத்தரக் குடும்பத்து இல்லத்தரசியாகவும், தையல் வேலை செய்பவராகவும் காட்டப்படுகிறார். ஆனால், இடைவேளைக்கு சற்று முன்பு இவருக்கும் ஒரு மாஸான ‘கராத்தே வீராங்கனை’ பின்னணி இருப்பது தெரியவந்து, அவரும் சண்டைக் காட்சிகளில் இறங்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பவர்ஃபுல் பாத்திரத்தில் வெறும் எமோஷனல் தாயாக இல்லாமல், இவரும் ஒரு கராத்தே வீராங்கனையாக வந்து க்ளைமாக்ஸ் மற்றும் குடும்பம் ஒன்றாக இணைந்து மாஃபியாவை எதிர்க்கும் காட்சிகளில் இவரது கம்பீரமான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்.

கார்ப்பரேட் மாஃபியா கும்பலின் தலைவனாக, கிராமத்து நிலங்களைச் சுரண்டத் துடிக்கும் பேராசை பிடித்த மெயின் வில்லனாக முரட்டுத்தனமான உடலமைப்பால் மிரட்டியுள்ளார். இவரது பிசிக்கல் லுக் மற்றும் கார்ப்பரேட் வில்லத்தனம் அர்ஜுன் குடும்பத்திற்கு எதிரான மோதலைத் தீவிரமாக்குகிறது.

அர்ஜுன் சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வதேச கொலையாளி ஆபிரகாமாக வருண் தயாளனின் வலதுகரமாகவும், இரக்கமற்ற சைக்கோ கொலையாளியாகவும் வந்து படம் பார்ப்பவர்களைக் கோபப்பட வைக்கிறார். வருண் தயாளனுக்குத் துணையாகவும், கதையின் முக்கியத் திருப்பங்களுக்கு இவரது தந்திரமான வில்லத்தனம் உதவுகிறது.

பவன் கிருபாகரன் என்ற உள்ளுர் தாதாவாக வந்து அர்ஜுன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனிடம் அடி வாங்கும் வழக்கமான வில்லனாக நடித்துள்ளார்.

வினோத் சாகர் (டோபி) மற்றும் பாலா ஹாசன் (சிவன்) ஆகியோர் கதையின் கிளைக் கதைகளில் வந்து மாஃபியா நெட்வொர்க்கை ஹீரோ குடும்பத்துடன் இணைக்கும் முக்கியப் புள்ளிகளாக நடித்துள்ளனர்.பிளாஸ்ட் படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சுபாஷ் கே. ராஜ்.இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் (லவ் டுடே) உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுபாஷ் கே. ராஜின் அறிமுகத் திரைப்படம் இது. ஒரு குடும்பமே கராத்தே பாணியில் கில்லர் மெஷினாக மாறி மாஃபியாவை அடிக்கும் ‘ஆக்ஷன் பேக்டு’ கதையை சுவாரசியமாக இயக்கியுள்ளார். பெண் குழந்தைகளைச் சமுதாயத்தில் எப்படித் தைரியமாக வளர்க்க வேண்டும் என்ற மெசேஜையும் நேர்த்தியாகக் கூறியுள்ளார். வழக்கமான தமிழ் சினிமாவில் ஒரு தனி நபர் மட்டுமே ஒட்டுமொத்த வில்லன்களையும் அடிப்பார். ஆனால், ஒரு நடுத்தர குடும்பத்தை ‘தி இன்கிரெடிபிள்ஸ்’ பாணியில் ஒரு கில்லர் மெஷினாக மாற்றியதில் இயக்குநரின் கற்பனைத் திறன் தனித்து நிற்கிறது. ப்ரீத்தி முகுந்தனின் ‘நிலா’ கதாபாத்திரத்தை வெறும் பெயரளவிலான பெண் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றாமல், அதற்குப் பின்னால் இருக்கும் நியாயமான தார்மீக மற்றும் உணர்வுபூர்வமான காரணங்களை மிக ஆழமாக எழுதியுள்ளார். ஒரு ஆண் மாஸ் ஹீரோவுக்குக் கொடுக்கப்படும் அதே மாஸான இன்ட்ரோ மற்றும் சண்டைக் காட்சிகளை ஒரு பெண்ணுக்குக் கொடுத்து, அதை பார்வையாளர்கள் ஏற்கும் வண்ணம் கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.நிலா சிறுவயதில் கராத்தே கிளாஸ் சேரும்போது அவளுக்கு ஒரு டெடி பியர் பொம்மை பரிசாகக் கிடைக்கிறது. அடுத்த காட்சியில், அவள் அதை கட்டிப்பிடிக்காமல், கராத்தே பயிற்சி செய்வதற்கான ‘பஞ்சிங் டம்மியாக’பயன்படுத்துவது போன்ற காட்சிகள், வசனங்கள் இல்லாமலேயே கதாபாத்திரத்தின் தன்மையை விவரிக்கின்றன.படம் முழுக்க 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சண்டைக் காட்சிகள் வந்தாலும், ரவி பஸ்ரூரின் அதிரடி ஆங்கிலப் பாடல்கள் பின்னணியில் ஒலித்தாலும், படம் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கும் சரியான தருணத்தில், திரைக்கதையை அடுத்த திருப்பத்திற்குத் திருப்பிவிடுகிறார் இயக்குநர் சுபாஷ் கே. ராஜ்.முதல் படத்திலேயே தேவையற்ற போதனைகளோ தொய்வூட்டும் காதல் காட்சிகளோ இல்லாமல், ஒரு தூய்மையான ‘ஆக்ஷன்-பேக்டு’ குடும்பக் கதையைத் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாகக் கொடுத்ததில் ஒரு நம்பிக்கைக்குரிய வெற்றி பட இயக்குநராக முத்திரை பதித்துள்ளார் சுபாஷ் கே.ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் ஆக்ரோஷ புதுமை.